Tamil News & polling
விக்கிரவாண்டி:
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சி கொடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்தார்.
கட்சி தொடர்பான அறிவிப்புகளை நடிகர் விஜய் அடிக்கடி வெளியிட்டார். இவை அனைத்தும் தமிழக மக்களிடம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த மாநிலம் தழுவிய முதல் அரசியல் மாநாட்டை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
மாநாட்டுக்காக நூற்றுக்கணக்கான ஏக்கரில் பார்வையாளர்கள் அமர தனி இடம், வாகனங்கள் நிற்க தனி இடம் என்று அனைத்து வசதிகளும் செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் 95 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தினசரி அங்கு நடைபெறும் ஒவ்வொரு பணிகளும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த விதத்தில் நேற்று முன்தினம் மாநாட்டு திடல் பகுதி முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் பறக்கவிடப்பட்டது.
இந்த சூழலில் நேற்று மாநாட்டு திடலில் மேடை வடிவமைப்பு மற்றும் நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதுவும் வழக்கம் போல் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்தது. மேடை பணிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அதன் முன்பகுதியில் கட்சியின் கொடி இரு யானைகளுடன் வரையப்பட்டு, அதற்கு கீழே 'வெற்றிக் கொள்கை திருவிழா' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுதவிர இன்னும் மேடையில் என்னவெல்லாம் இடம்பெற்று கவனம் பெற போகிறதோ என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் உள்ளனர். இதேபோன்று, மற்றொரு பணியாக மாநாட்டு திடல் நுழைவு பகுதி கோட்டை மதில் சுவர் போல் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு உள்ளே நுழையும் பாதையில் இரு புறங்களிலும் பிளிறும் இரு யானைகள் இடம் பெற்று இருக்கிறது.
மழையால் பாதிக்காமல் இருக்க மாநாட்டு திடல் அமைந்துள்ள 85 ஏக்கர் பரப்பளவுக்கும் பச்சை நிறத்தில் தரைவிரிப்பு போடும் பணிகள் நேற்று தொடங்கியது. தரைவிரிப்புக்கு மேல் இருக்கைகள் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். தரைவிரிப்பு, அதற்கு மேல் பறக்கும் கட்சி கொடிகள் என்று அந்த பகுதியே வண்ணமயமாக மிளிருகிறது.
மாநாட்டுக்காக திடல் எந்தஅளவில் தயாராகி வருகிறதோ, அதேபோன்று அங்கு வருகை தரும் தொண்டா்கள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் மற்றும் 350 நடமாடும் கழிவறைகள் வந்திறங்கின. அவற்றை மாநாட்டு திடலின் முக்கிய பகுதிகளிலும், மாநாட்டு திடலுக்கு வெளியே பிரதான இடங்களிலும் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
மேலும் 700 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நேற்று முதல் தொடங்கியது. மாநாட்டு திடலில் 1500 பேர் அமரும் வீதம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், சாலை நடுவே உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய் மட்டும் நேரடியாக மேடைக்கு செல்ல தனிவழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநாட்டின் போது போக்குவரத்தை சீரமைப்பதற்காக கட்சி சார்பில் போலீசாருக்கு 100 பேரிகார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே விஜய்யின் கொள்கை என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதுபோன்ற சூழலில் நேற்று மாலையில் மாநாட்டு திடலில் பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரது கட்-அவுட்கள் வைக்கப்பட்டு, அவர்களுடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டது. பலரது கவனத்தையும் பெற்றது.
மேலும் 2 ஆயிரம் வாழை மரங்கள், 5 ஆயிரம் கரும்புகள் என்று வரவேற்புக்கு தேவையான அலங்கார பொருட்களும் பெருமளவில் அமைக்கதிட்டமிட்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த பொருட்கள் அனைத்தும் இயற்கையை சார்ந்தே அமைக்கவேண்டும் என்று கட்சியினர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
பணிகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) முடிக்கப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து விஜய் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விக்கிரவாண்டியை நோக்கி புறப்படுவதற்கு தயாராகி வருகிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வருவதற்கு தனித்தனி குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்குள் வரும்போது மற்றும் மாநாடு முடிந்து திரும்பி செல்லும்போது நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக பிரத்யேக குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தொலை தூரங்களில் இருந்து வரும் வெளி மாவட்ட நிர்வாகிகள் ஒரு நாளைக்கு முன்பே நாளை மறுநாள் விக்கிரவாண்டிக்கு புறப்பட வேண்டும் என்பதால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விக்கிரவாண்டி வந்ததும் குளித்து தயாராக ஆங்காங்கே மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் காலையில் மாநாட்டு அரங்கு பகுதிக்கு வந்து உணவு அருந்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டு அரங்கு பகுதியில் பல்வேறு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அனைத்து வாயில்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தொண்டர்கள் காலை மற்றும் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மாநாட்டு அரங்கில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் தொண்டர்கள் ஞாயிற்றுக் கிழமை காலை முதல் புறப்பட்டு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு காலை உணவு அவர்களது வாகனங்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் தொண்டர்களை அழைத்து வருவதற்கும், உணவு வழங்குவதற்கும் தனித்தனி குழுக்கள் பணியாற்றத் தொடங்கி உள்ளன.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்குள் மாநாட்டு பந்தலுக்குள் வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் அனைவரும் விஜய் படம் போட்ட டிஷர்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் சீருடைகளில் வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெண்கள் பாதுகாப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் 2 மணிக்கு அமர்ந்ததும் அந்தந்த பொறுப்பாளர்கள் மூலம் கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்படும். பிற்பகல் 4 மணிக்கு சரியாக மாநாடு தொடங்கும். முதலில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றுவார்கள். இதைத் தொடர்ந்து கட்சி தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை அறிக்கையாக வெளியிடப்படும். இதையடுத்து நடிகர் விஜய் சிறப்புரையாற்றுவார். இரவு 8 மணி அளவில் அவர் தனது பேச்சை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 9 அல்லது 9.30 மணிக்கு மாநாடு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியூர் தொண்டர்கள் அன்று இரவே பாதுகாப்புடன் ஊர் திரும்ப பொறுப்பாளர்கள் முன் நின்று பணிகளை கவனிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விஜய் பேச்சை கேட்பதற்காக கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூகவலை தளங்களில் விஜய் கட்சி மாநாடு பற்றிய தகவல்கள் வைரலாக பரவி டிரெண்டிங்காக உள்ளது. அரசியல் கட்சி தொடங்கி விஜய் நடத்தும் முதல் அரசியல் மாநாடு அனைத்து தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு
கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - 2 பேருக்கு போலீஸ்
நடத்தையில் சந்தேகம்: பெண்ணை கொன்று கள்ளக்காதலன் தூக்குப்போட்டு
ஜார்கண்டில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்: தலைமை ஒருங்கிணைப்பாளராக
விஜய் Vijay TVK DMK தவெக திமுக அதிமுக கனமழை தமிழக வெற்றிக் கழகம் சென்னை Chennai திருமாவளவன் அண்ணாமலை ADMK Annamalai பாஜக MK Stalin Tamil Nadu BJP AIADMK Thirumavalavan சீமான் தவெக மாநாடு தீபாவளி வடகிழக்கு பருவமழை எடப்பாடி பழனிசாமி இந்திய அணி indian cricket team Seeman முக ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் தமிழக வெற்றிக்கழகம் TVK Conference Tamilaga Vettri Kazhagam தமிழ்நாடு Northeast Monsoon செங்கோட்டையன் TTV Dhinakaran Sengottaiyan மு.க.ஸ்டாலின் AMMK PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி மழை தவெக விஜய் VCK பாமக காங்கிரஸ் Edappadi Palaniswami தென்காசி Tirunelveli TVK Vijay IMD விடுமுறை மதுரை அமரன் பாலியல் தொல்லை விசிக திருச்செந்தூர் Udhayanidhi Stalin நயினார் நாகேந்திரன் வானிலை கைது தமிழக அரசு GetOut Stalin நடிகை கஸ்தூரி Ind vs Nz தனுஷ் திருநெல்வேலி திமுக அரசு GetOut Modi PM Modi Heavy Rain Congress தமிழகம் Ajith Washington Sundar M.K. Stalin rain Nainar Nagendran Thoothukudi வாஷிங்டன் சுந்தர் இந்தியா சட்டசபை தேர்தல் தூத்துக்குடி கோலிவுட் டிடிவி தினகரன்