12 வயது சிறுமிகளை குறிவைத்து சிதைத்த குற்றவாளி - 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை!
பிரிட்டனின் ரோச்டேல் பகுதியில் 12 வயது சிறுமிகளை குறிவைத்து நடத்தப்பட்ட கொடூர பாலியல் வன்கொடுமை கும்பலின் தலைவன் ஷபீர் அகமது (73), நேற்று சிறையிலிருந்து நிபந்தனை ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளார்.
அவரது இந்த விடுதலை, பாதிக்கப்பட்ட பெண்களிடையே பெரும் அச்சத்தையும் பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
யார் இந்த ஷபீர் அகமது?..
கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிட்டனையே உலுக்கிய சிறுமிகள் பாலியல் சுரண்டல் வழக்கில் ஷபீர் அகமதுவிற்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளால் 'டாடி' என்று அழைக்கப்பட்ட இவரது தலைமையிலான 9 பேர் கொண்ட கும்பல், சிறுமிகளுக்கு உணவு மற்றும் சிகரெட் கொடுத்து, மது பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது.
பூர்வீகம் பாகிஸ்தான்..
பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட இவர், 1960 களின் இறுதியில் பிரிட்டனுக்கு வந்தார். இவரது குற்றத்திற்காக பிரிட்டன் குடியுரிமை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த சிறைத்தண்டனை முடிந்ததும் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிரிட்டனின் 1971 ஆம் ஆண்டு குடிவரவு சட்டத்தின்படி, 1973க்கு முன்பு பிரிட்டனுக்கு வந்த காமன்வெல்த் நாடுகளின் குடிமக்களை நாடுகடத்த முடியாது என்ற விதியும் உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் அச்சம்..
தற்போது விடுவிக்கப்பட்டுள்ள ஷபீர் அகமது, 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிக்கும் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியின் காலில் கண்காணிப்பு வளையம் பொருத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளவும், யாரிடமும் நெருங்காமல் இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சட்டத்தில் உள்ள ஓட்டையை அவசரமாகத் திருத்தி, அவனைப் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்ப பிரிட்டன் அரசு தீவிர சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.