சேலம் நீட் மாணவி தற்கொலை: அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

சேலத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 19 வயதான மாணவி ஒருவர் மறுதேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்.

சலூனில் பணிபுரியும் சேகர் (45) மற்றும் தினக்கூலித் தொழிலாளியான புவனேஸ்வரி (38) ஆகியோரின் மகளான எஸ். கோபிகா, சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்த பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

கடந்த மே 03-ஆம் தேதி நடைபெற்ற தேர்வு உட்பட, அவர் மூன்று முறை நீட் தேர்வு எழுதியிருந்தார். மேலும் மறுதேர்விற்காக கடுமையாகத் தயாராகி வந்தார். இந்த நிலையில், நீட் மறுதேர்வு குறித்த அழுத்தம் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.

மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.

கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.

இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என பதிவிட்டுள்ளார்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel