பூமணி மறைவு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு- கனிமொழி
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். பூமணி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்ததுடன் பூமணியின் இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நவீனத் தமிழிலக்கிய ஆளுமை கரிசல் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவருமான எழுத்தாளர் பூமணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
கரிசல் நிலப்பகுதி மக்களின் வாழ்வியலை, மொழியை, பண்பாட்டை மையமாகக் கொண்ட கலைப்படைப்புகள் அவருடையவை. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக படைப்பிலக்கிய வெளியில் பயணித்து வரும் அவர், தமிழின் யதார்த்தவாத புனைவெழுத்தின் முன்னோடியாக புது தலைமுறை எழுத்தாளர்களிடமும் தாக்கம் செலுத்தியவர். அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.