INDIAN 7

Tamil News & polling

முன்பதிவு காலம் குறைப்பு- ரெயில் பயணிகள் வரவேற்பு

18 அக்டோபர் 2024 05:17 AM | views : 69
Nature

குனியமுத்தூர்:

சென்னை, கோவை உள்பட பெரு நகரங்களில் தங்கியருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

அவ்வாறு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரெயிலில் தான். இதற்காக ரெயிலில் முன்பதிவு செய்து விடுவார்கள்.

இப்படி ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பயணிக்க முடியும் நிலை இருந்தது. பயணிகளும் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து, பயணித்து வந்தனர்.

இந்த நிலையில், ரெயில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையானது வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. ரெயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பானது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து போத்தனூர் ரெயில் பயணிகள் சங்க பொதுச் செயலாளரும், சேலம் ரெயில்வே கோட்ட பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் கூறியதாவது:-

ரெயிலில் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வைத்து பயணிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். பொதுவாக ரெயில் பயணம் செய்ய விரும்புவர்கள் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் புக்கிங் செய்து, பிளாக் செய்து விடுவதால், அவசர தேவைகளுக்காக செல்பவர்களுக்கு அது கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

மேலும் பல்வேறு பகுதிகளில் ஏஜென்ட்கள் இதுபோன்று அதிகப்படியான டிக்கெட் புக்கிங் செய்து விட்டு, கடைசி நேரத்தில் அதனை கேன்சல் செய்து விடுவதும் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பயணிகள் மட்டுமே.

மேலும் நீண்ட நாட்களுக்கு முன்பு புக்கிங் செய்யும்போது ஒரு சிலருக்கு மறதி ஏற்பட்டு, பயணிக்கும் நாட்களையும் தவற விடும் சூழலும் உள்ளது.

தற்போது முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 60 நாட்களாக குறைக்கப்படும் என்ற ரெயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு வரவேற்க கூடியதாகும்.

60 நாட்கள் என்பது, எளிதாக அனைவருக்கும் மனதில் நிற்கக் கூடிய நாட்களாகும். மேலும் தேவையற்றவர்கள் புக்கிங் செய்து வைத்திருப்பது குறையும். ரெயில்வே துறையின் இத்தகைய முடிவு ரெயில் பயணிகளுக்கு முற்றிலும் நன்மையே ஆகும். பயணிகள் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்