அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: சி.வி. சண்முகம்

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் வலுவடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்க 17 எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியை நியமிக்க 30 எம்எல்ஏக்களும் தனித்தனி அணிகளாக இடைக்கால சட்டப்பேரவைத் தலைவரிடம் திங்கள்கிழமை கடிதம் கொடுத்தனர்.


இது குறித்து, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் இன்று(மே 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தேர்தல் முடிந்த பிறகு சில முன்மொழிவுகளை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி எங்களிடம் வைத்தார். நாங்கள் எதிர்த்த திமுகவோடு பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று கூறினார். திமுகவுடன் இணைந்தால் அதிமுக இல்லாமல் போய்விடும் என்று நாங்கள் கூறினோம்.


அதிமுக 2021, 2024-ல் பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டும். கை நழுவி சென்றுவிட்டது. அதிமுக காப்பற்றப்பட வேண்டும். ஆகையால், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழுவை விரைந்து கூட்ட வேண்டும். அதிமுக ஏன் தோற்றது என்பதை ஆராய்ந்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை, தேர்தலுக்கு முந்தைய கூட்டணியிலும் இல்லை” என்றார்.


பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel