பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்து எட்டு மாதங்களான நிலையில் திடீரென தற்போது ஜெயலலிதா நினைவிடத்துக்கும், எம்ஜிஆர் நினைவு இல்லத்துக்கும் சென்று வந்துள்ளார். அதிமுகவின் கொடியை ஏற்றி பொதுச் செயலாளர் என்று தனது பெயர் போட்ட கல்வெட்டையும் அமைத்திருக்கிறார். மிக முக்கியமாக தற்போதைய அதிமுக தலைமையுடன் இணக்கமாக செல்லத் தயார் என வெளிப்படையாக வெள்ளைக் கொடி காட்ட உள்ளார்.
ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் டெல்லியுடன் நெருக்கம் காட்டி அந்த நம்பிக்கையிலேயே சசிகலாவை எதிர்த்து வருகின்றனர். டெல்லி சென்றாலோ, டெல்லி சென்று திரும்பினாலோ சசிகலாவுக்கு எதிராக பேசுவதை இருவரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். டெல்லியும் சசிகலாவுக்கு பல்வேறு குடைச்சல்களை கொடுத்து வருகிறது. அவரது சொத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக முடக்கப்பட்டு வருகின்றன.
ஆனபோதும் கட்சியில் இணைவதில் உறுதியாக இருக்கிறாராம். எனவே சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமான அவரது சமூகத்தைச் சேர்ந்த அதே சமயம் கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக கால் ஊண்ற காரணமாக இருந்த ஒருவர் மூலம் சமரச பேச்சுவார்த்தையை சசிகலா நடத்தி வந்ததாக சொல்கிறார்கள். எடப்பாடி தரப்பிடம் அவர் தான் தொடர்ச்சியாக பேசிவருவதாகவும் கூறுகிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் சசிகலா சில சமரசங்களுக்கும் சம்மதித்துள்ளதாக கூறுகின்றனர். சசிகலாவை உள்ளே விட்டால் மன்னார்குடி குடும்பமே உள்ளே நுழைந்து நமது தலைமேல் அமர்ந்துகொள்ளும் என எடப்பாடி மட்டுமல்லாமல் பன்னீர் செல்வமும் நினைப்பதாக அப்போதே தகவல் வெளியானது. தற்போது சசிகலா தான் மட்டுமே கட்சிக்குள் வருவதாக தெரிவித்துள்ளாராம். அதனாலே சனி, ஞாயிற்றுக் கிழமை சசிகலா முன்னெடுத்த முக்கிய நிகழ்வுகளில் டிடிவி தினகரனையும் அனுமதிக்கவில்லை என்கிறார்கள்.
சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா உடனடியாக தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அதை எடப்பாடி பழனிசாமி தனக்கு சாதகமாக பார்ப்பார் என்கிறார்கள். பொதுச் செயலாளர் பதவி மட்டும் போதும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை மிக பலமான பதவி அதுதான். அனைத்து அதிகாரங்களும் அந்த பதவிக்கு தான் உள்ளது. அனைத்து அதிகாரங்களையும் அவரிடம் கொடுத்துவிட்டு நிற்கவும் ஓபிஎஸ், இபிஎஸ் தயாராக இல்லையாம். எனவே அந்தப் பதவியின் அதிகாரங்களை குறைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.
திரைமறைவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளும், தூது படலமும் சரியாக சென்றால் மேற்சொன்ன பாதையில் சசிகலாவும், எடப்பாடியும் செல்வார்கள் என்று உறுதியாக சொல்கிறார்கள் இரு பக்க நகர்வுகளையும் அறிந்தவர்கள்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S