பள்ளி மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு கோடை விடுமுறை வழக்கத்தை விட முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மே மாதத்தில் தொடங்கும் கோடை விடுமுறை, இந்த முறை மாணவர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியிலேயே தொடங்குகிறது.
தமிழகத்தில் 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 17 ஆம் தேதிக்குள் முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காகப் பள்ளிக் கட்டிடங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் ஆண்டுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தத் தமிழக பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாதத் தொடக்கத்தில் நடைபெறும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள், இந்த முறை மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்திற்குள்ளாகவே நடத்தி முடிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான விரிவான தேர்வு கால அட்டவணையைத் தயாரிக்கும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், தேர்தல் நாளன்று வாக்குச் சாவடிகளாகச் செயல்படும் பள்ளிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் வழிவகை செய்யப்படும்.
குறிப்பாக, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை மார்ச் மாதத்திற்குள்ளாகவே முடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணிகளில் எந்தவிதத் தொய்வும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று, மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளதால், கோடை விடுமுறையை முன்னதாகவே அறிவிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தத் திடீர் மாற்றங்கள் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வழியாகப் பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுவதால், பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் மாணவர்களின் படிப்புத் திறன் குறையாமல் இருக்கத் தேவையான மாற்று ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.