Tamil News & polling
ஓரிரு வாரங்களில், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சிமெண்ட் விலை உயர்வினைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகத் தொழில்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:''தனியார் சிமெண்ட்டின் விலை 2021 மார்ச் மாதம் 420 ரூபாய் முதல் 450 ரூபாய் ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து, ஜூன் மாதம் முதல் வாரம் மூட்டை ஒன்றுக்கு 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு அரசின் கவனத்திற்கு வந்தவுடன் முதல்வரின் உத்தரவின் பேரில், தொழில் துறை அமைச்சர் சிமெண்ட் விலையை குறைப்பது தொடர்பாக தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் 14.06.2021 அன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.அக்கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர், சிமெண்ட் விலை உயர்ந்துள்ளதால் கட்டுமானத் தொழிலுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படக்கூடிய இன்னல்களைக் குறிப்பிட்டு, சிமெண்ட் விலையைக் குறைக்குமாறு தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களைக் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் தங்கருடைய சிமெண்ட் சில்லரை விற்பனை விலையினை மூட்டை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை குறைத்து, 15.06.2021 முதல் விற்பனை செய்து வந்தனர். விலை உயர்வினை மேலும் குறைக்க, அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக சிமெண்ட் விலையானது 420 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.இந்நிலையில் நிலக்கரித் தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் நிலக்கரி இறக்குமதிக்கான போக்குவரத்துச் செலவினங்கள் ஆகியவை உயர்ந்த காரணத்தால், கடந்த 6.10.2021 அன்று சிமெண்ட்டின் விலையானது 470 ரூபாய் முதல் 490 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியதின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலையானது குறைக்கப்பட்டு, தற்பொழுது 440 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.தற்போது நடைமுறையிலுள்ள சிமெண்டின் விலையானது மார்ச் மாத விலையான ரூபாய் 420-ஐ ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து தற்சமயம் 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது 4.7 சதவீதமே ஆகும். எனவே, சிமெண்டின் இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது. தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்குக் குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 367,677 மெ.டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68.233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது, டான்செம் சிமெண்ட் 350 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.தனியார் சிமெண்டின் விலையினை ஒப்பிடுகையில், 90 ரூபாய் குறைந்த விலையில் தரமான டான்செம் சிமெண்ட் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடங்களில் தமிழ்நாட்டின் சிமெண்ட் விற்பனையில் டான்செமின் விற்பனைப் பங்கு மிகக்குறைவாகவே இருந்தது. சென்ற வருடம் 3.5 சதவீதம் ஆக இருந்த டான்செம்மின் விற்பனை பங்கானது நடப்பாண்டில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், டான்செம் விற்பனையினை அதிகரிக்கத் தொடர்ந்து நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், ஓரிரு வாரங்களில், தமிழக அரசின் டான்செம் நிறுவனம் 'வலிமை' என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிறுவனம் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 90,000 மெ.டன் என் அளவில் வெளிச்சந்தையில் 'அரசு' சிமெண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனுடன், குறைந்த விலையிலும். நிறைந்த தரத்திலும் வலிமை சிமெண்ட் முதல்கட்டமாக மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் என்ற அளவில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிமெண்ட்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும்''.இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress