திமுக கட்சியின் பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகள் பொறுப்பு சேர்க்கை முடிவடைந்த நிலையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நிர்வாகிகள் வாழ்த்து பெரும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது மர்ம நபர் ஒருவர் சஃபாரி உடையில் கடும் போலீஸ் பாதுகாப்பையும் மீறி முதல்வர் அமர்ந்திருந்த மேடை அருகில் சென்றுள்ளார். இதனைபார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் அந்நபர் தானும் காவல்துறை அதிகாரி தான் எனக்கூறி தமிழ் நாடு காவல்துறை ஐ.டி கார்டை காண்பித்துள்ளார். ஆனால் அவரின் பேச்சு சந்தேகமளிக்கவே முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அந்த நபர் கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார்(42) என்பது தெரியவந்தது. மேலும், அந்த நபர் பொள்ளாச்சி கிளை சிறைச்சாலையில் வார்டனாக இருப்பதும் தெரியவந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில் நேற்று அதிகாலை கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து விமான மூலம் தனது நண்பர் நாட்ராயன் என்பவரோடு சென்னைக்கு வந்துள்ளார். பின்பு காலை 08:30 மணி அளவில் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டுக்கு சென்று அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டு பின்னர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திப்பதற்காக அறிவாலயம் வந்துள்ளார் என்பதும் பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னை போலீஸ் எனக்கூறி சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தமிழ்நாடு காவல்துறை ஐடி கார்டை போலியாக வைத்துக்கொண்டு முதல்வரை சந்திக்க முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, தன்னை பொது ஊழியராக போலியாக காட்டிக் கொள்வது, மோசடி உள்நோக்கத்துடன் தான் பொது ஊழியர் என அரசு அதிகாரிகளை நம்ப வைப்பது, பொய்யான ஆவணங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை துறை வார்டனான வசந்தகுமாரை கைது செய்தனர். பின்னர் மேஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் போலீசார் வசந்தகுமாரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S