Tamil News & polling
பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் படங்களை ப்ரோபைல் படங்களாக வைத்து போலி அக்கவுண்டுகள் பல இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த போலி அக்கவுண்டுகளை உண்மை என்று நம்பி ஏமாறும் நபர்கள் இந்த காலத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை உறுதி படுத்துவதுபோல ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான மகாநதி படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு, கன்னட ரசிகர்கள் மத்தியிலும் புகழ்பெற்றார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது படத்தை ப்ரோபைல் போட்டோவாக வைத்து பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார் கர்நாடகாவில் உள்ள ஹசன் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண். இந்த அக்கவுண்ட் மூலம் ஆண்களுக்கு ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்பியுள்ளார். அவ்வாறு ரெக்வஸ்ட் அனுப்புகையில் அது அம்மாநிலத்தின் விஜயாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமா என்ற நபருக்கும் சென்றுள்ளது. தனக்கு ரெக்வஸ்ட் வந்த ப்ரோபைலை பார்த்த பரசுராமாவுக்கு அந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற விவரம் தெரியவில்லை. யாரோ ஒரு அழகான பெண் நம்முடன் பழக வேண்டும் என ரெக்வஸ்ட் கொடுத்ததாக நினைத்து குஷியாகி அதை அக்செப்ட் செய்துள்ளார்.
இந்த பரசுராமா ஹைதராபாத்தில் கட்டுமானத்துறையில் பணியாற்றி வருகிறார். அத்துடன் அரசு வேலைகளுக்கான தேர்வுக்கும் படித்து வருகிறார்.அப்படி இருக்கத்தான் இந்த பேஸ்புக் சகவாசம் பரசுராமாவுக்கு கிடைத்துள்ளது. மஞ்சுளாவும் பரசுராமாவும் பேஸ்புக்கில் சாட் செய்யத் தொடங்கியுள்ளனர். பேசும் போதே பரசுராமா புகைப்படத்தை பார்த்து மயங்கி ஏமார்ந்து போனது மஞ்சுளாவுக்கு தெரிந்துள்ளது. கிடைத்தது ஜாக்பாட் என்று மஞ்சுளாவும் அவரின் நம்பர் வாங்கி வாட்ஸ்ஆப் மூலமாகவும் பேச ஆரம்பித்துள்ளார். தான் கல்லூரி படிக்கும் இளம்பெண், எனது படிப்புக்கு உதவி செய்கிறீர்களா என்று மஞ்சுளா நாடகம் போட்டு பணம் பறிக்கத் தொடங்கியுள்ளார். இடையில் பரசுராமாவிடம் காதல் வார்த்தை பேசி பேசி ஆசையையும் தூண்டிவிட்டுள்ளார்.
மனதுக்கு விருப்பமான பெண்ணுக்கு தானே பணம் தருகிறோம் என கேட்கும் போதெல்லாம் மஞ்சுளாவுக்கு பணம் அனுப்பியுள்ளார் பரசுராமா. இதுவரை நேரில் பார்க்காத தனது காதல் தேவதைக்கு லட்சக் கணக்கில் பரசுராமா பணம் அனுப்பிய நிலையில், மஞ்சுளா விரித்த மற்றொரு வலையிலும் அவர் வீழ்த்து ஆழமாக மாட்டிக்கொண்டார். ஒருமுறை பரசுராமாவிடம் ஆசையாக பேசி அவர் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை மஞ்சுளா ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டுள்ளார். ஏற்கனவே லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த மஞ்சுளா, இந்த வீடியோவை வைத்து பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளார்.
ஆசையால் மோசம் போன பரசுராமா ஒரு கட்டத்தில் தன்னால் பொறுக்க முடியாது என்று முடிவெடுத்து கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதை வைத்து சைபர் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹசன் மாவட்டத்தின் தசராளி கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளாவை கைது செய்துள்ளனர். அப்போது தான் தன்னிடம் செல்போனில் ஆசை வார்த்தை பேசியது கீர்த்தி சுரேஷ் அல்ல, மஞ்சுளா என்ற உண்மையை பரசுராமா தெரிந்துகொண்டார். காவல்துறை மஞ்சுளாவை கைது செய்த போது தான், அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இந்த மோசடி உடந்தையில் மஞ்சுளாவின் கணவருக்கும் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மஞ்சுளாவின் கணவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த மோசடி மூலம் பரசுராமாவிடம் இருந்து சுமார் ரூ.40 லட்சம் அளவிற்கு பணம் பறித்துள்ளார் மஞ்சுளா. அதை வைத்து 100 கிராம் தங்கம், ஹூண்டாய் கார், பைக் என பொருள்களை வாங்கி குவித்துள்ள மஞ்சுளா, வீடு ஒன்றையும் கட்ட ஆரம்பித்துள்ளார். கைது செய்யப்பட்ட மஞ்சுளாவிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல்துறை இவரிடம் வேறு ஏதேனும் நபர்கள் இதுபோல ஏமார்ந்துள்ளார்களா என்ற கண்ணோட்டத்திலும் விசாரித்து வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள அவரது கணவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress