முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிச் சென்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்த போது அவரது கான்வாயில் மேயர் பிரியா ராஜன் தொங்கியபடி சென்ற சம்பவம் தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து புறப்பட்ட போது அவரது கான்வாய் வாகனத்தில் மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் தொங்கியபடி பயணம் செய்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறியதால், மோட்டார் வாகன சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சரோடு இருக்க வேண்டும் என்ற துடிப்போடு நடந்த செயல் எனவும், அதை பெரிதுபடுத்த தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.