நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை நள்ளிரவு 1 மணிக்கு திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக உள்ளது. குறிப்பாக, ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் வெளியாகிறது.
இந்த நிலையில் முதல் காட்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகள் நள்ளிரவு ஒரு மணிக்கு வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சியை திரையிட திட்டமிட்டு வருகின்றனர்.
அரசு அனுமதி வழங்கினால் இரவு ஒரு மணிக்கு வாரிசு திரைப்படத்தின் காட்சிகள் திரையிடப்படும். ஏற்கனவே அஜித்தின் துணிவு திரைப்படமும் ஒரு மணிக்கு திரையிடப்படும் என செய்திகள் பரவி வந்தன.
இந்த நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி ஒரு மணிக்கு திரையிட முடிவு என திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பகுதிகளில் பதிவிட்டு வருகின்றனர்.
இருந்தாலும் தமிழக அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே நள்ளிரவு காட்சிகள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே முதல் காட்சிகளுக்கான முடிவுகள் இறுதி கட்டத்தை எட்டும்.