பள்ளிகளுக்கு குளிர் கால விடுமுறையை ஒருவாரம் நீட்டித்து பஞ்சாப் மாநில அரசு விடுமுறையை அளித்துள்ளது.
பஞ்சாப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையாக டிசம்பர் 25 (2022) முதல், ஜனவரி 1 (2023) ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் காலநிலை காரணமாக அந்த மாநிலத்தில் இருக்கும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 7ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல 2023 ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் ஜனவரி 2ம் தேதி முதல் 14 வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவும் லக்னோவில் டிசம்பர் 31 வரை பள்ளிகளை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் எதிரொலியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளும் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அமைத்துள்ளன.