INDIAN 7

Tamil News & polling

நாடு முழுவதும் 3 ஆண்டுகளில் 9 ஆயிரம் கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

15 மார்ச் 2023 02:49 AM | views : 72
Nature

புதுடெல்லி : அங்கத்தை அழகு செய்யும் தங்கத்தின் விலை நாளுக்குநாள் அசுர வேகத்தில் உயர்ந்துகொண்டே இருக்கிறது.இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு அதன் மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு புறம் இருக்க தங்கம் இல்லாமல் வணிகம் இல்லை என்கிற நிலையிலேயே உலகப்பொருளாதாரம் உள்ளது.பண்டைய காலத்தில் இருந்தே இதே நிலைதான்.

தங்கம் நுகர்வில் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலை வகிக்கிறது.கடந்த 2021-2022-ம் ஆண்டில் சுமார் ரூ.3.44 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதுமட்டுமின்றி கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்திய பெரும் பணக்காரர்கள் பலர் அதனை தங்கமாக மாற்ற ஆசைப்படுவதாலும் தங்கத்தின் மீதான நுகர்வு இந்தியாவில் அதிகமாக உள்ளது.இப்படி தங்கத்தின் தேவை இந்தியாவில் அதிகமாக இருப்பதால் துபாய், சிங்கப்பூர் போன்ற தங்கம் விலை குறைவாக உள்ள நாடுகளில் இருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை இந்தியாவுக்கு கடத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் விலை அதிகமாக இருப்பதால் கடத்தல்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. இதற்கிடையே தங்கத்தின் விலை நாளுக்குநாள் அதிகரிப்பது, கடத்தல்காரர்களை கடத்தலுக்கு மேலும் தூண்டுகிறது.இப்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் தங்கத்தை சுங்க அதிகாரிகள் அவ்வப்போது பறிமுதல் செய்து வருகிறார்கள். சில நேரங்களில் விமான நிலையத்தில் இருந்து தங்கம் வெளியேறினாலும் ரெயில் நிலையங்களில் பிடிபட்டு விடுகிறது.இதுபோன்ற கடத்தலில் கடந்த 3 ஆண்டுகளில் பிடிபட்ட தங்க விவரங்களை பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர், பத்ம விபூஷண் விருது பெற்ற நடனக்கலைஞர் சோனல் மான்சிங் நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேட்டு இருந்தார்.இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அதில், 'கடந்த 3 ஆண்டுகளில் (2020 முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை) நாடு முழுவதும் சுமார் 9 ஆயிரம் கிலோ, அதாவது 8 ஆயிரத்து 956 கிலோ 490 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாட்டிலேயே அதிக அளவு கடத்தல் தங்கம் கடந்த 3 ஆண்டுகளில் கேரளாவில்தான் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஆயிரத்து 869 கிலோ 290 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் ஆயிரத்து 317 கிலோ 430 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இதனையடுத்து மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்து125 கிலோ 380 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.வழக்குகளை பொறுத்தவரை நாடு முழுவதும் 9 ஆயிரத்து 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் 2,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.தங்கம் கடத்தலை தடுக்கும் பணிகளை புலனாய்வு அமைப்புகள் ரகசிய தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன' என்று மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்