Tamil News & polling
லக்னோ: கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தில் (இப்போது பிரயாக்ராஜ்) அத்தீக் அகமது பிறந்தார். இவரது தந்தை பெரோஸ் குதிரை வண்டி ஓட்டி குடும்பத்தை நடத்தினார். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த அத்தீக் படிப்பை தொடரவில்லை.
முதலில் சரக்கு ரயில்களில் நிலக்கரியை திருடி விற்றார். அதன் பிறகு ரயில்வே கழிவு பொருட்களை வாங்கும் தொழிலில் ஈடுபட்டார். அப்போது அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை மிரட்டி அனைத்து ரயில்வே கழிவு பொருட்களையும் அவரே வாங்கினார். தொழில் போட்டி காரணமாக 17-வது வயதில் ஒருவரை கொலை செய்தார். 23-வது வயதில் பிரயாக்ராஜ் பகுதியின் பிரபல ரவுடியானார்.
அப்போது பிரயாக்ராஜ் பகுதியில் சந்த் பாபா என்ற ரவுடி கோலோச்சினார். அவரை எதிர்த்தவர்கள் அத்தீக் அகமதுவுடன் கைகோத்தனர். ஷாகத் என்ற ரவுடியும் பிரயாக்ராஜில் ஆதிக்கம் செலுத்தினார். கடந்த 1989-ல் போலீஸ் கவுன்ட்டரில் ஷாகத் கொல்லப்பட்டார். அதே ஆண்டில் அத்தீக் அகமதுவின் அடியாட்கள் ரவுடி சந்த் பாபாவை பட்டப்பகலில் கொலை செய்தனர்.
இதன்பிறகு அரசியலில் கால் பதித்த அத்தீக் அகமது கடந்த 1989-ம் ஆண்டு முதல் அலகாபாத் மேற்கு தொகுதியில் 5 முறை எம்எல்ஏவாகவும் கடந்த 2004 முதல் 2009 வரை புல்பூர் மக்களவைத் தொகுதியில் எம்பி ஆகவும் பதவி வகித்தார். சமாஜ்வாதி, அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்தார்.
இவர் மீது 103 வழக்குகள் உள்ளன. கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அத்தீக் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் அத்தீக் அகமது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உமேஷ் பால் கடத்தப்பட்ட வழக்கில் கடந்த 13-ம் தேதி அத்தீக் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதேநாளில் அவரது 3-வது மகன் ஆசாத் அகமது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கடந்த 1995-ல் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றபோது, அன்றைய சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கின் ஆதரவாளர்கள், மாயாவதி உட்பட பகுஜன் எம்எல்ஏக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அத்தீக் அகமது தலைமையிலான ரவுடிகள் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன்பிறகு பகுஜன் எம்எல்ஏ ராஜு பாலையும் அத்தீக்கின் அடியாட்கள் கொலை செய்தனர். இதன் காரணமாக மாயாவதி முதல்வராக இருந்தபோது அத்தீக் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவரது சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடியவில்லை. சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் அத்தீக் சுதந்திரமாக வலம் வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2017-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அப்போது முதல் அத்தீக் அகமது மற்றும் அவரது அடியாட்கள் 89 பேர் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அவரது ரூ.11,684 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.
அத்தீக் அகமதுவுக்கு 5 மகன்கள். இவர்களில் மூத்த மகன் உமர், 2-வது மகன் அலி ஆகியோர் ஆள்கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். 3-வது மகன் ஆசாத் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசி 2 மகன்களும் மைனர்கள். அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் உள்ளனர். அத்தீக் அகமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீண் தலைமறைவாக உள்ளார். கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உமேஷ் பால் கொல்லப்பட்ட நாளில் இருந்து 50 நாட்களில் அத்தீக் அகமதுவின் ரவுடி சாம்ராஜ்ஜியத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அழித்துள்ளார். கடந்த 45 ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தை ஆட்டிப்படைத்த அத்தீக்கின் உடலை உறவினர்கள் நேற்று பெற்றுக் கொண்டனர்.

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress