உடல் நலக்குறைவு - சிங்கப்பூர் மருத்துவமனையில் எ.வ.வேலு அனுமதி
உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்தனர்.
நெடுஞ்சாலைத் துறையில் பணிகளை மேற்கொண்டதில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சாலைகளை அமைக்காமலேயே சாலைகளை போட்டதாக கூறி மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு பாய்ந்தது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராக வலியுறுத்தி எ.வ.வேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அப்போது, உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் எ.வ.வேலு சிகிச்சை பெறுகிறார். மேலும் 10 நாட்களுக்கு அவர் மருத்துவ சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சிகிச்சைக்கு பின் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று தகவல் தெரிவித்தனர்.