குறைவான மழைப்பொழிவு: ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த ராஜஸ்தான் பல்கலைக்கழகம் திட்டம்
ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், அம்மாநிலத்தில் நிலவும் குறைவான மழைப்பொழிவை சுட்டிக்காட்டி, மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளை இணையவழியில் நடத்த முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தானில் இயல்பை விட குறைவான மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதையும், நீர் வளங்களை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கருத்தில் கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எல் நினோ வானிலை முன்னறிவிப்பை கருத்தில் கொண்டும், வளாகத்தில் நீரை சிக்கனமாக நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 14 வரை அனைத்து வகுப்புகளும் இணையவழியில் நடைபெறும். பல்கலைக்கழகத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய சுமார் 3.5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
தற்போது போதுமான நீர் வசதி இருந்தாலும், தற்காலிகமாக இணையவழி வகுப்புகளுக்கு மாறுவது, நம்மிடம் இருக்கக்கூடிய வளங்களை சிறப்பாக நிர்வகிக்க உதவும்” என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “வருகைப்பதிவு பராமரிக்கப் படுவதையும், கல்வி சேவைகள் தடங்கலின்றி நடைபெறுவதையும், பேராசிரியர்கள் திட்டமிட்டபடி இணையவழியில் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவார்கள்.
பேராசிரியர்கள் கோடை விடுமுறை முடிவடைந்த பின்பு, பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இணையவழி வகுப்புகளை நடத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.