வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தற்போதே கைப்பற்றி விட்டது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. பிரண்டன் மெக்கல்லம் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது தலைமையில் இங்கிலாந்து அணி மிக அதிரடியான ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வெளிப்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவிலேயே 416 ரன்கள் குவித்து அசத்தியது. அதோடு டெஸ்ட் வரலாற்றில் முதல் 4.2 ஓவர்களிலேயே 50 ரன்கள் அடித்து வரலாற்று சாதனையையும் நிகழ்த்தியிருந்தது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் ஒரு நாளில் எங்களால் 500 முதல் 600 ரன்கள் வரை அடிக்க முடியும். சில சமயங்களில் 280 முதல் 300 ரன்கள் வரை தான் ஒரு நாளில் எடுப்போம். அது சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடுவது ஆனால் ஒரே நாளில் எங்களால் 500 முதல் 600 ரன்கள் வரை எடுக்க முடியும்.
உண்மையிலேயே அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற பசி எங்களிடம் உள்ளது. அதனால் நிச்சயம் வெகுவிரைவில் நாங்கள் 600 ரன்கள் அடிப்போம் என ஒல்லி போப் கூறினார். மேலும் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி ஆடவேண்டும் என நினைக்கிறோமோ அதேபோன்று தான் விளையாடி வருகிறோம் என கூறினார்.
இதுவரை ஒரு நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 506 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.