கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கணவன் வெளிநாட்டில் இருப்பதால் தாயார் வீட்டில் சில நாட்களும் மாமியார் வீட்டிலும் சில நாட்களும் மாறி மாறி இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு தாழக்குடி பகுதியில் ஒரு சுடுகாட்டில் ஆடைகள் கலைந்த நிலையில் படுகாயங்களுடன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பெண்ணை கொன்றது கொழுந்தன் என்பது தெரியவந்தது. அவரை உடனே கைது செய்த போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்காக அண்ணியை இரும்பு கம்பியால் தாக்கியது மட்டுமல்லாமல் மயக்க நிலையில் இருந்த அவரை காரில் வைத்து பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு உடலை தாழக்குடி ஊர் பகுதியில் ஒரு சுடுகாட்டில் உடலை போட்டுவிட்டு நகையை எடுத்து தப்பித்து சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு அடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், அண்ணியை கொலை குற்றத்திற்காக கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் அவருக்கு அபராதமாக ரூ.3000 விதிக்கப்பட்டது.