நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி அண்மையில் பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
அதேபோல் கட்சிக்கான பாடலும் வெளியிடப்பட்டிருந்தது.கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தெரிவிப்போம் அதுவரை கட்சியினர் கட்சிக் கொடியை முறையாக அனுமதி பெற்று ஏற்றிக் கொண்டாடுங்கள் என விஜய் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து வரும் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் அதற்காக பாதுகாப்பு மற்றும் அனுமதியை த.வெ.க கோரியுள்ளது.கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டிற்கான அனுமதிகோரி கடந்த 28 ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசாரும் விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு 21 கேள்விகளை அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.இந்த நிலையில் மாநாட்டுக்கான இடமே இன்னமும் முடிவாகாத நிலையில் மாநாட்டை ஒத்திவைப்பது தொடர்பாகவும் நடிகர் விஜய் தரப்பு ஆலோசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
அடுத்த 3 மாதங்களுக்கு மழை காலம் என்பதால் ஜனவரியில் மாநாட்டை நடத்தலாமா? என நடிகர் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில், மாநாட்டை ஒத்திவைப்பது தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில்,
செப்டம்பர் 23-ந் தேதி திட்டமிட்டபடியே விக்கிரவாண்டியில் கட்சியின் மாநாடு நடைபெறும் என்றும், இதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.