Tamil News & polling
சென்னை,
நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரானார். விசாரணை நிறைவடைந்த பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"விசாரணையில் புதிய கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கத்தை அளித்துள்ளேன். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணைக்கு அழைப்போம் என்று கூறினார். நான் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தேன்.
இந்த வழக்கு குறித்து ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நடிகை தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வருவதாக நான்தான் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரிக்க 3 மாத காலம் அவகாசம் இருக்கும்போது, 3 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
என் வீட்டில் சம்மன் ஒட்டியதோடு காவல்துறையின் வேலை முடிந்துவிட்டது. சம்மன் ஒட்டும்போது தடுத்திருந்தால் பணி செய்யவிடாமல் தடுப்பதாக கைது செய்திருக்கலாம். ஒட்டப்பட்ட சம்மனை நாங்கள் பார்த்த பிறகு கிழித்தோம். அது எப்படி குற்றமாகும்?
எங்கள் வீட்டிற்கு காவலாளி என்று யாரும் கிடையாது. என் வீட்டில் கைது செய்யப்பட்டவர் காவலாளி அல்ல. அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். என் மீது உள்ள அன்பு காரணமாக, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பாசத்தின் காரணமாக வந்தவர் அவர்.
என் வீட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் இரும்பு கம்பியில் துணியை சுற்றி அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். அது தேவையற்றது. நானும், என் மனைவியும் மனஉறுதி கொண்டவர்கள். ஆனால் என்னை நேசிக்கும் தம்பி, தங்கைகள் வலியுடன் குரல் செய்திகளை அனுப்புகின்றனர். அது வலியை மட்டுமின்றி, வெறியையும் ஏற்படுத்துகிறது.
என் மீது புகார் அளித்த நடிகைக்கும், எனக்கும் இடையே திருமணம் குறித்த எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. நான் அந்த நடிகையிடம் இருந்து 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாகவும், 7 முறை கரு கலைப்பு செய்ததாகவும் கூறுவதை உறுதிப்படுத்தாமல் பதிவு செய்திருக்கக் கூடாது. இந்த நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர் யார்?
பெரியாருக்கு எதிராக நான் பேசியதால் என்னை கைது செய்ய அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. நான் கைது, மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். அது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
தமிழக முதல்-அமைச்சருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விஜய் தனது பேச்சின்போது தற்போதைய ஆட்சியாளர்களை விமர்சித்துள்ளார். கொள்கை மற்றும் கருத்தியல் ரீதியாக அவருடன் வேறுபாடு உள்ளதே தவிர, விஜய் மீது உள்ள பாசத்தில் எந்த குறையும் இல்லை. அவர் எப்போதும் எனது அன்பிற்குரிய தம்பி.
அரசியல் ரீதியாக அவர் வேறு தளத்தில் நின்றுவிட்டார். நான் வேறு தளத்தில் நிற்கிறேன். அவர் பெரியாரை தனது கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டார். நான் பெரியாரை ஏற்கவில்லை.
என் மனைவி என்னை விட அதிக துணிச்சல் கொண்டவர். எங்கள் வீட்டில் எதைப் பற்றியும் நாங்கள் விவாதிக்கமாட்டோம். ஒரு பெண்ணை நான் கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்துவிட்டதுபோல் பேசி வருகின்றனர். மக்கள் பிரச்சினைக்காக தினமும் குரல் கொடுப்பவனைப் பற்றி ஒரு நடிகை அவதூறாக பேசி வந்தபோது ஒருவர் கூட ஏன் என்று கேள்வி எழுப்பவில்லை.
எனக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னையும், என் குடும்பத்தையும் 15 ஆண்டுகளாக அவமானப்படுத்துகிறீர்கள். என்னைப்பற்றி சொல்லும்போது சிரிக்கும் முகம், நான் என் ஆதங்கத்தை சொல்லும்போது மட்டும் சுழிக்கிறதா? இதைப் பற்றி பேச எந்த தலைவருக்கு தகுதி இருக்கிறது? எங்களிடம் சிறந்த வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த வழக்கை பார்த்துக் கொள்வார்கள்."
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

விஜய் Vijay Chennai சென்னை DMK TVK திமுக அண்ணாமலை தவெக Annamalai பாஜக அதிமுக BJP கனமழை Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் எடப்பாடி பழனிசாமி TTV Dhinakaran MK Stalin AIADMK திருமாவளவன் AMMK சீமான் ADMK மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு செங்கோட்டையன் Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் டிடிவி தினகரன் Thirumavalavan PMK முக ஸ்டாலின் Sengottaiyan Seeman வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam சட்டசபை தேர்தல் கைது வானிலை ஆய்வு மையம் பாமக Edappadi Palaniswami