நடிகை செளந்தர்யா விபத்தின் காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் அவரது மரணத்தில் மூத்த தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்பிருப்பதாகவும் தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
1990களில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நட்சத்திர நடிகையாக கொடிகட்டிப் பறந்தார் செளந்தர்யா. 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்காக பெங்களூரிலிருந்து கரீம்நகருக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் இறந்தனர்.
செளந்தர்யா உயிரிழந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், நடிகர் மோகன்பாபுதான் அவரது மரணத்துக்குக் காரணம் என்று தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் சத்யநாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் காவல்துறையிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்திருக்கிறார்.
ஐதராபாத் ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் செளந்தர்யாவுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்டதாகவும், ஆனால் சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டதாகவும் சிட்டிமல்லு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்பாபு, சௌந்தர்யாவையும் அமர்நாத்தையும் கொலை செய்து விமான விபத்து போல் சித்தரித்துவிட்டதாகவும் சிட்டிபாபு குற்றம்சாட்டியுள்ளார். செளந்தர்யா இறந்த பிறகு அந்த நிலத்தை, நடிகர் மோகன்பாபு ஆக்கிரமித்து விருந்தினர் மாளிகையை கட்டியுள்ளதாகவும் அந்த நிலத்தை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும் என்றும் சிட்டிமல்லு தன் புகார் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S