சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டு பேசினர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி கலந்து கொண்டார்.
இவ்விழாவில் சுந்தர்.சி பேசும்போது, ‘எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியும் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில்நுட்ப குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.
மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா. அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.