திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மகள் ஜெய ஹரிணிக்கும், தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் து.கிருஷ்ணசாமி மகன் ராமநாத துளசிக்கும் கடந்த மாதம் 16ஆம் தேதி திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதையடுத்து தஞ்சையை அடுத்த பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சசிகலா உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள், அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவரும், டி.டி.வி.தினகரனும் மேடையிலேயே தனியாக நின்று சிறிதுநேரம் பேசி கொண்டிருந்தனர். இந்த விவகாரம் தற்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கும் சில நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிமுகவில் தொடர்ந்து சலசலப்பும் குழப்பமும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஓபிஎஸின் சகோதரரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிடிவி தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக, எப்போதும் நிதானமாக பேசும் ஓ பன்னீர் செல்வம், சரியான கருத்தையே கூறியிருக்கிறார் என்றார்.
சசிகலா விவகாரம் அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா டி.டி.வி. தினகரன் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S