கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் முடிவெட்ட வந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சலூன் கடை உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(53). இவர் கிணத்துக்கடவில் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது மகன் மற்றும் 3 வயது மகளை முடி வெட்டுவதற்காக, மணிகண்டனின் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மணிகண்டன் முதலில் அவரது மகனுக்கு முடிவெட்டிய நிலையில், பின்னர் அவரது மகளுக்கு முடி வெட்டியுள்ளார். அப்போது, பணம் எடுப்பதற்காக அந்த பெண் வெளியே புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது, மணிகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பின் அந்த பெண் திரும்பி வந்தபோது சிறுமி அழுது கொண்டிருந்துள்ளார். இது குறித்து அவரிடம் தாய் விசாரித்தபோது, மணிகண்டன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.