தமிழ்நாடு அரசு சவுக்கு சங்கரை கைது செய்திருப்பது தவறில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிற்காக நேற்று வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தேனி மக்களவைத் தொகுதியில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள், பெண் காவல்துறை உயர் அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்ட பலரையும் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசி இருப்பது அனைவரையும் வருத்தம் அடைய செய்தது என்றும், தமிழ்நாடு அரசு சவுக்கு சங்கரை கைது செய்துள்ளது தவறில்லை என்றும், இதுவே அனைவரது கருத்தாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.