சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் உலா வருகின்றன. இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்டவிரோதமாக உடைத்து கனிம வளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போது அக்கூட்டத்தில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துக்களை தெரிவித்தார்.
அதேபோல் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும் அவர் பேசினார். இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் சாட்டை துரைமுருகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சாட்டை துரைமுருகனை வரும் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பத்மநாபபுரம் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் தீனதயாளன் உத்தரவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் நாங்குநேரி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் மீது 143, 153, 153A, 505 (2), 506 (1), 269 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சாட்டை துரைமுருகன் 3 வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் உலா வருகின்றன. இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொள்ளையடித்து கொண்டு செல்வதை கண்டித்து நேற்று (10.10.2021) கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் போக்கோடு பொய்யாக குற்றம் சாட்டி, வழக்கு புனைந்து சிறைப்படுத்தி இருக்கும் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்கமுடியாது.
சாட்டை துரைமுருகனின் தற்போதைய சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரை கைவிட்டது போல கட்சியின் கடிதத்தாளை போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும்.
இத்தருணத்தில் அவர் இவ்வழக்கில் இருந்து மீண்டு வரவும் சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாக துணை நிற்கும் என தெரியப்படுத்துகிறோம்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், சாட்டை துரைமுருகன் கைதிற்கு சீமான் ஏன் நேரடியாக கண்டனம் தெரிவிக்காமல் உள்ளார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் வட்டாரங்களில், “ஒருவேளை வழக்கு பாயலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்” என பேச்சு அடிபடுகிறது