குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் வீடுகளை சுற்றி வெள்ளநீர் புகுந்துள்ளது.
இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருநெல்வேலி ,தேனி ,தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது.இந்த கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 குடிசை பகுதிகள் சேதமடைந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கன மழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்தும் பாதிப்படைந்துள்ளன. இதனால் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரியில் வெள்ளம் தேங்கி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்கள் பாதுகாப்பாக தங்களது வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.