அரியலூர் 10 ஆம் வகுப்பு மாணவியை 8 மாதம் கர்ப்பமாக்கிய 9 ஆம் வகுப்பு மாணவன் போக்சோவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மாணவனை கைது செய்து திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர். மேலும், மாணவி அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.