இடைக்கால பொதுசெயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி பல உட்கட்சி குழப்பங்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகிறார்கள்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு ஜனவரி 4ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை இன்று கூட்டி இருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.
இதற்கிடையில் எடப்பாடி தரப்பில் டிசம்பர் 27ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் செய்திதொடர்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதனிடையில், கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்குகளை கடந்த நவம்பர் 29ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த கணக்குகளை இன்று தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் தாக்கல் செய்த அந்த விவரங்களை தனது இணையதள பக்கத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றியுள்ளதால், எடப்பாடி பழனிசாமி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.