புதுடெல்லி:பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான். அவர்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டு வந்து தவறு செய்துவிட்டார் என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ ஜவகர்லால் நேரு கொண்டு வரவில்லை என கூறியுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:ஜவகர்லால் நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரியும் என்று எதிர்பார்க்க முடியாது, அதை மாற்றி எழுதும் பழக்கம் அவருக்கு உண்டு.நாடுமுழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அதை திசை திருப்பவே நேரு குறித்து அமித்ஷா விமர்சித்துள்ளார்.நாட்டின் செல்வங்கள் எங்கே, யாருக்கு செல்கின்றன? ஆனால் இந்த விஷயம் குறித்து பேச அவர்கள் விரும்பமாட்டார்கள்.ஜாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது என தெரிவித்தார்.