ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்ற கனவு மாணவர்களிடம் என்றும் இருக்கும். அதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது, இரவு-பகலாக படித்து முயற்சிகள் மேற்கொள்வது காலம் காலமாக நடக்கிறது. இருப்பினும் பலரது கனவு கனவாகவே போய் விடுகிறது.
ஒரு மாவட்டத்தில் ஒரு சில அதிகாரிகள் உருவாவதே அரிதான விசயம். ஆனால் ஒரு கிராமத்தில் அதுவும் 75 வீடுகள் மட்டுமே இருக்கும் குக்கிராமத்தில் இருந்து 51 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாகி இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிகிறதா?
இந்த கிராமம் எங்கே இருக்கிறது? நம்ம மாநிலத்திலா...? என்று கேட்க தோன்றும். அந்த பெருமையை உத்தரபிரதேச மாநிலம் பெற்றுள்ளது.
அந்த மாநிலத்தில் இருக்கும் மாதோபட்டி கிராமம் தான் அந்த பெருமைக்குரிய கிராமம்.
75 குடும்பங்களைக் கொண்ட இந்தக் கிராமத்தில், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அதிகாரி இருக்கிறார் என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த கிராமத்தின் சாதனையின் உச்சம் ஆகும். மாதோபட்டியை சேர்ந்த வினய் குமார் சிங், சத்ரபால் சிங், அஜய் குமார் சிங் மற்றும் சசிகாந்த் சிங் ஆகிய இந்த 4 சகோதரர்களும் உயர் பதவிகளுக்கு உயர்ந்து நாடு தழுவிய சாதனையை படைத்தனர். இவர்களில், வினய் குமார் சிங் பீகாரின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றார். இவரின் சேவையால் ஈர்க்கப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்ற இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக குடிமைப் பணிகளில் சேரத் தொடங்கினர். மாதோபட்டியில் நிகழ்ந்த இந்தக் கல்விப் புரட்சி இன்று, நேற்று நிகழ்ந்ததல்ல. இதற்கு அடித்தளமிட்டது 1914-ல் பிரிட்டிஷ் கால சிவில் சர்வீசில் சேர்ந்து பணியாற்றிய முஸ்தபா உசேன் என்பவர் தான்.
அவர் முதலில் என்றால் அடுத்து சுதந்திரத்திற்குப் பிறகு 1952-ல் இந்து பிரகாஷ் சிங் என்பவர் ஐ.எப்.எஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கிருந்து தொடங்கிய இந்த ஐ.ஏ.எஸ் போட்டி இன்றுவரை நிற்கவில்லை. 2002-ல், அமிதாப் சிங் 298-வது ரேங்க் பெற்று இந்த கிராமத்தின் புகழை மேலும் உயர்த்தினார்.
பெருநகர இளைஞர்கள் பயிற்சி மையங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்கும் வேளையில், மாதோப்பட்டி இளைஞர்கள் வித்தியாசமானவர்கள். இங்கு பெரிய நூலகங்களோ, குளிரூட்டப்பட்ட பயிற்சி மையங்களோ இல்லை. மாறாக, மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலும், கிராமத்தின் கல்விச் சூழலுமே இங்குள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றன.
இந்த 51 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்ல, இந்த கிராமத்தின் மற்ற இளைஞர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளிலும் உயர் பதவிகளை வகித்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் இருக்கும் மாதோப்பட்டி கிராமத்தில் இத்தனை அதிகாரிகள் இருப்பதன் காரணத்தால் தான் மாதோபட்டி இந்தியாவின் ‘அதிகாரிகளின் கிராமம்’ அல்லது ‘ஐ.ஏ.எஸ். தொழிற்சாலை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், கிராமத்தில் நீங்கள் எந்தத் தெருவுக்குச் சென்றாலும், ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரியை நிச்சயம் சந்திக்க முடியும்.
இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்றார்கள். முதுகெலும்பு மட்டுமல்ல. மூளையாகவும் செயலாற்றுகிறது என்பதை மாதோப்பட்டி நிரூபித்துள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞர் -...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: