கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செப் ஹாலிடிஸ்’ எனப்படும் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த 26 வயது இளம்பெண், வெள்ளிக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர் ஆலப்புழா மாவட்டம், அம்பலப்புழா அருகே உள்ள நீர்க்குன்னத்தைச் சேர்ந்த ஆர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவிலியராகப் பணிபுரிந்து வந்த அவர், கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். வியாழக்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் தற்காலிகமாக குறைந்திருந்த நிலையில், இந்த மரணம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நிலவி வரும் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு, புதிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
« முந்தைய செய்தி (Previous)
நாடே திரும்பி பார்க்கிறது... ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கும்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: