உண்மையில் ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி வெளியேறியவுடனேயே சிஎஸ்கே கதை முடிந்தது. 3 ஓவர் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் 18வது ஓவரில் நார்ட்யே வீசுகிறார், ருதுராஜ் கெய்க்வாடுக்கு லாங் ஆஃப் இல்லாமல் பந்து வீசி அருமையாக ஒரு ஹாஃப் வாலி பந்தை வீசுகிறார் அது ஹெட்மையர் டைவையும் தாண்டி லாங் ஆஃப் பவுண்டரிக்குச் செல்கிறது. மேலும் ஹெட்மையரும் மிட் ஆஃபில் சரியான பொசிஷனில் நிற்கவில்லை. இது எப்படி? இதற்கு முன்னால் ஆவேஷ் கான் 17வது ஓவரில் புல்டாஸ்களாக வீசித்தள்ளுகிறார், யாரும் அவரிடம் வந்து எதுவும் சொல்லவும் இல்லை. 19வது ஓவரில் ஒரு புல்டாஸில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்த சவுகரிய புல்டாசில் மொயின் அலி பவுண்டரி விளாசுகிறார்.
பிறகு அதே ஓவரில் தோனி இறங்கியவுடன் அவருக்கு அருமையாக ஒரு பந்தை தேங்காய் உடைப்பது போல் அரைக்குழியில் குத்தி ஒரு பந்தை போடுகிறார், தோனி அதை சிக்ஸ் அடிக்கிறார்.
அதே போல் அக்சர் படேலை தேவையில்லாமல் முன்னால் களமிறக்கியது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அய்யர் ஆட்டமிழந்த விதம் விக்கெட்டை தூக்கி எறிந்த தருணமாக இருந்தது. கடைசியில் ஷிம்ரன் ஹெட்மையர் 24 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க சரவெடி பேட்டிங்கை எதிர்பார்த்த ரிஷப் பந்த் 35 பந்துகளில் 51 என்பது சற்றே மந்தமான இன்னிங்ஸ்தான். கொஞ்சம் நெருக்கியிருந்தால் 180-185 ரன்களை எடுத்திருக்கலாம். இப்படியாக ஏகப்பட்ட விஷயங்கள் கேள்விகளாகவே உள்ளன. ஒன்றெயொன்று ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பெரிய பேட்ஸ்மெனாக உருவெடுத்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
சிஎஸ்கே வெற்றி அல்லது டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி உண்மையில் நிறைய கேள்வியைத்தான் எழுப்புகின்றதே தவிர ஒரு நல்ல கிரிக்கெட்டைப் பார்த்ததற்கான மகிழ்ச்சியையும் நிறைவையும் தரவில்லை.