மிலாடி நபி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை செவ்வாய்க்கிழமை (அக்.19) மூட உத்ததரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மிலாடிநபி பண்டிகையாக கொண்டாடப்பட்டு அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பிறை வந்ததையடுத்து வருகின்ற 19ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதனால் அன்றைய தினம் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மதுக் கூடங்கள் ஆகியன அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்றும் டாக்மாஸ் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அக்.19ஆம் தேதி மிலாடி நபி தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.