ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு திரைப்படமும் இன்று வெளியாகின. நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படமும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படமும் திரையிடப்பட்டது. தமிழ் திரையுலகில் இருதுருவங்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் அஜித் - விஜய் படங்கள் பொங்கல் பண்டிகைக்கு 8 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடியாக மோதுவதால், இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்குகளில் குவிந்தனர். இந்நிலையில்
அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை சென்னை ரோகினி திரையரங்கில் பார்க்க வந்த ரசிகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது நடனம் ஆடியபடி கீழே குதித்தார். அப்போது அவருக்கு முதுகுத்தண்டில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கே எம் சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது சிந்தாதரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் ( 19) என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்துக் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.