தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) மாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஊர்குடியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலி, நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை இந்தியா கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க., ம.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஓட்டலில் இரவு தங்கினார்.இன்று அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வந்தடைந்தார். தஞ்சையில் காலை நேரத்தில் முதலமைச்சர் நடைபயணம் மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார்.
சத்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்பகுதியில் பொதுமக்கள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் உரையாடிய அவர், அப்பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்தார். விளையாட்டு மைதானத்தில் இருந்தவர்கள் முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S