ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டிகள் எப்போதுமே பிரசித்தி பெற்றதாகும். இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியா உலகக் கோப்பைகளில் பெரும்பாலும் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது.
குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் 2021 துபாய் தோல்வியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. மறுபுறம் இந்தியாவிடம் பெரும்பாலும் தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் தோற்றது. அதனால் கொஞ்சம் பலவீனமடைந்துள்ள அந்த அணியை இம்முறையும் இந்தியா வீழ்த்தும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தானை வீழ்த்துவார்கள் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை கொண்டு வருவது அவசியம் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இந்தியாவுக்கு சாதகம் இருக்கிறது. ஏனெனில் போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தில் ஏற்கனவே இந்தியா விளையாடியுள்ளது. பாகிஸ்தான் ஃபிளாட்டான பிட்ச்சில் விளையாடிய பின் இங்கே வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த அவர்கள் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு உட்படுவது மிகவும் கடினமாகும். எனவே இப்போட்டியில் இந்தியாவுக்கு வெற்றிக்கான சாதகம் இருக்கிறது”
“அவர்கள் நன்றாகவும் விளையாடுகின்றனர். ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலர். அவரிடம் நிறைய வேரியேசன்களும் இருப்பதால் கண்டிப்பாக அவர் விளையாட வேண்டும். 8வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவார் என்பதால் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்று கூறினார்.
அவர் கூறுவது போல இப்போட்டி நடைபெற உள்ள நியூயார்க் மைதானத்தில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொண்டு இந்தியா வீழ்த்தியது. மறுபுறம் அமெரிக்காவுக்கு எதிராக டாலஸ் நகரில் விளையாடிவிட்டு நியூயார்க் நகரில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் வருகிறது. எனவே நியூயார்க் மைதானத்தின் சூழ்நிலை இந்திய அணிக்கு சற்று அதிகமாக தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.