ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை தோற்கடித்த இந்தியா தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கிறது. மேலும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, அர்ஷ்தீப் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.
எனவே இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் சமீப காலங்களாகவே பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற டாப் அணிகளை தோற்கடித்துள்ள ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்தை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பியது. எனவே ரசித் கான் தலைமையில் முகமது நபி, குர்பாஸ் போன்ற தரமான வீரர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று நம்பலாம்.
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி ஜூன் 20ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 1930 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் 2008 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வரலாற்றில் 29 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது.
அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 18 வெற்றிகளையும் சேசிங் செய்த அணிகள் 8 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இந்தியா இங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வரலாற்றில் 8 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 7 வெற்றிகளை பெற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
பார்படாஸ் நகரில் இப்போட்டி நடைபெறும் நாளன்று வானம் மேகமூட்டத்துடன் லேசாக மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே லேசாக மழையின் குறுக்கீடு இருந்தாலும் முடிவு கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.
பார்படாஸ் மைதானம் வரலாற்றில் பவுலர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ரன்களாகும். இங்கு அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் 224 ரன்கள். வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு 170 ரன்கள்.
எனவே பேட்ஸ்மேன்கள் இங்கே பெரிய ரன்கள் குவிப்பதற்கு சூழ்நிலைகளை உணர்ந்து விளையாடுவது அவசியமாகிறது. மேலும் இங்கே முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிகமாக வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து நல்ல ஸ்கோர் அடிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.