Tamil News & polling
எந்தவொரு விளையாட்டிலும் உலக கோப்பை என வந்தால், அது விளையாட்டு ஆர்வலர்களிடையே ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தும்.
அதவும் கிரிக்கெட்டில் ஐசிசி டி20 உலக கோப்பை என்றால் அதன் ரசிகர்களுக்கு அது கொண்டாட்டமாகவே மாறி விடும்.
ஷார்ட் ஃபார்மெட் கிரிக்கெட்டுக்கான உலகக் கோப்பை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. கடைசியாக 2016இல் டி20 ஐசிசி உலக கோப்பை நடந்த பிறகு 2018இல் உலக கோப்பை டி20 நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அணிகளின் பரஸ்பர திட்டங்கள் காரணமாக அது நடக்கவில்லை. இதற்கிடையே, 2017இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியை நடத்தியது. அடுத்ததாக 2020இல் டி20 உலக கோப்பை திட்டமிடப்பட்டபோதும், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக அந்த விளையாட்டு தாமதமானது. கடைசியில் ஐந்து ஆண்டு இடைவேளைக்குப் பிறகு டி20 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
போட்டியை இந்தியா நடத்துகிறது என்றாலும், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவிருக்கிறது
இந்த உலக கோப்பை நீண்டதாக இருக்கப் போகிறது. அதாவது மொத்த ஆட்டத்தின் காலம் 29 நாட்களுக்கு இருக்கும். இதில் 16 அணிகள் 45 ஆட்டங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முதலாவது ஆட்டம் அக்டோபர் 17ஆம் நடக்கும். இதையடுத்து இறுதிப்போப்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.
முதலாவது குழுவில் அயர்லாந்து, நமிபீயா, நெதர்லாந்து மற்றும் இலங்கை பரஸ்பரம் மோதிக்கொள்ளும். அதில் ஜெயிக்கும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும்.
இதேபோல, இரண்டாவது குழுவில் வங்கதேசம், ஓமான், பப்புவா நியூ கினி, ஸ்காட்லாந்து ஆகியவை பரஸ்பரம் மோதி அதில் இருந்து இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
இதன் பிறகு சூப்பர் 12 சுர்று இருக்கும். அதில் முதல் குரூப்பில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணி ஏ1 மற்றும் பி2 என இருக்கும்.
இரண்டாவது குரூப்பில் இந்தியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவை பி1 மற்றும் ஏ2 என இருக்கும்.
இந்த ஏ1, பி2 மற்றும் பி1, ஏ2 இடங்களில் முன்பு இரு குழுக்களில் இருந்து தகுதி பெறும் நான்கு அணிகள் இடம்பெறும்.
இந்த அணிகள் ஒவ்வொரு குழுவுடனும் மோதும். இதில் முதல் இரண்டு அணிகள் நாக்-அவுட் கட்டத்துக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டத்தைத் தொடர்ந்து இறுதி ஆட்டம் நடக்கும்.
சூப்பர் 12 கட்டம் அக்டோபர் 23இல் தொடங்கி நவம்பர் 8ஆம் தேதிவரை நடக்கும். நாக் அவுட் சுற்று நவம்பர் 8இல் தொடங்கி நவம்பர் 10இல் நிறைவடையும். நவம்பர் 14இல் இறுதி ஆட்டம் நடைபெறும்.
ஐசிசி டி20 தர வரிசையில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. விராட் கோஹ்லி, கேஎல். ராகுல் ஆகியோர் ஐசிசியின் முதல் 10 பேட்டிங் வீரர்கள் பட்டியலில் உள்ளனர். ஐசிசி டி20 பெளலர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை.
ஐசிசி உலக கோப்பையைப் பொருத்தவரை, 33 ஆட்டங்களில் 20இல் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.
இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, இந்த உலக கோப்பை ஆட்டத்துக்கு பிறகு 20 ஓவர் ஃபார்மெட்டில் தமது கேப்டன் பொறுப்பை துறப்பதாக கூறியிருக்கிறார். இவரது தலைமையில் இந்திய அணி எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.
ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பதவியை எட்டு ஆண்டுகளாக வகித்தார் கோஹ்லி. ஆனால், ஒருமுறை கூட அவரது தலைமை கோப்பையை வெல்லவில்லை. இதனால், கேப்டன் ஆக மட்டுமின்றி ரன் எடுக்கவே திணறும் நபாக கோஹ்லி ஆடுகளத்தில் பார்க்கப்படுகிறார். எனவே எதிர்வரும் போட்டி கோஹ்லிக்கு சவாலானதாக இருக்கும்.
இந்திய அணியின் வழிகாட்டியாக இம்முறை மகேந்திர சிங் தோனி இருப்பார். டி20 உலக கோப்பை துவக்க ஆட்டத்தின்போது இந்திய அணிக்கு கேப்டன் ஆக இருந்தார் தோனி. அவரது தலைமையில் இந்தியா 50 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறது.
மேலும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. அவர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அனுபவம், இந்திய அணிக்கு டி20 பங்கேற்பில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் அவரது உதவிக்குழுவினருக்கும் இதுவே கடைசி போட்டி. எனவே, இந்த போட்டியின் முடிவில் வெற்றியை பெற்றுக் கொண்டு ரவி சாஸ்திருக்கு பிரியாவிடை கொடுக்கலாம் என்று இந்திய அணி நம்புகிறது.
களத்தில் விராட் கோஹ்லி ஒருபுறமும் ரோஹித் சர்மா அவருக்கு உதவியாக மறுபுறத்திலும் இருப்பார். இவருடன் சேர்த்து கேஎல்.ராகுல், இஷான் கிஷண், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங் பொறுப்பை ஏற்பார்கள். ரிஷப் பந்த் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பார். இவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் திறன் இந்திய அணிக்கு திருப்பமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணிக்காக வீரர்களை தேர்வு செய்யும்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பெயரை அறிவித்தனர். 34 வயதாகும் அவருக்கு ஆஃப் ஸ்பின்னஸ் அனுபவம் உள்ளது. 2017இல் இந்தியா டி20 போட்டியில் ஆடியபோதும் இவர் அதில் பங்கேற்றார். அக்ஷர் படேல், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார் ஆகியோர் ப்ளேயிங் 11-ல் இடம் பிடிக்க விரும்புகிறார்கள்.
இவர்கள் தவிர, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகிய ஆல்ரவுண்டர்களும் களத்தில் இருபுறமும் இருப்பார்கல். ஹர்திக்குக்கு முன்பு முதுகு வலி இருந்ததால் ஐபிஎல் போட்டியில் அவருக்கு பெளலிங் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர், மாஹம்மத் ஷாமி ஆகியோரும் அணியில் உள்ளனர்.
அக்ஷர் படேலுக்கு பதிலாக வேறு வீரரை களமிறக்க தேர்வுக்குழு முடிவு செய்திருக்கிறது. ஹத்ரிக் பாண்டியாவுக்கு காயம் காரணமாக பெளலிங் வாய்ப்பு கிடைக்காது. அதனால், ஆல் ரவுண்டர் ஆன ஷர்துல் களமிறங்குவார். வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹர் களம் காணும் ஆர்வத்துடன் உள்ளனர். உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல், லுக்மேன் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கர்ன் சர்மா, ஷபாஸ் அஹ்மத், கே. கெளதம் ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலேயே இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய அணி உலக கோப்பையை ஆடும்வரை நெட் பெளலர்களாக இருப்பார்கள்.
ஹர்ஷல் படேல் ஐபிஎல் தொடரில் 15 ஆட்டங்களில் விளையாடி 32 விக்கெட்களை சாய்த்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் அவர் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தாக டெல்லி அணியின் வேகப் பந்து வீச்சாளர் அவேஷ் கான் 23 விக்கெட்களுடன் 2ஆம் இடத்தில் உள்ளார். அதேபோல, காஷ்மீரைச் சேர்ந்த உம்ரான் மாலிக்கும் இந்திய அணிக்கு நெட் பவுலராக சேரவுள்ளார். தொடர்ந்து 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர்கள் இந்திய அணிக்குப் பெரிய அளவில் உதவுவார்கள்.
போட்டியில் வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். அடுத்த நிலையில் இருக்கும் அணிக்கு அந்த தொகையில் பாதி அளவு பரிசாக கிடைக்கும். அரையிறுதிவரை தகுதி பெறும் அணிகளுக்கு தலா 4,00,000 அமெரிக்க டாலர்கள் கிடைக்கும். சூப்பர் 12 கட்டம்வரை வெல்லும் அணிக்கு போனஸ் தொகை பரிசாக வழங்கப்படும்.
டி20 உலக கோப்பையில் ஒவ்வொரு ஆட்டத்தின் இடையே கூடுதலாக இரண்டு முறை இடைவெளி கிடைக்கும். அது 2 நிமிடங்கள் 30 நொடிகளுக்கு இருக்கும். இது குறிப்பாக இன்னிங்ஸின் மத்திய பகுதியில் வழங்கப்படும்.
முதல் முறையாக டி ஆர் எஸ் டி20 உலகக் கோப்பை போட்டியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு அணிக்கும், ஒரு இன்னிங்ஸில், இரு டி ஆர் எஸ் வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்த ஆட்டத்தில் டிஆர்எஸ் எனப்படும் முடிவு மறுஆய்வு முறை அறிமுகப்படுத்தப்படும். இதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸுக்கும் இரு மறுஆய்வு முறையை ஒவ்வொரு அணியும் பயன்படுத்தலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் நான்கு இடங்களில் போட்டி நடக்கும். அவை மஸ்கட், துபாய், அபு தாபி, ஷார்ஜா இதில் மஸ்கட் நீங்கலாக பிற இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. அங்குள்ள ஆடுகளம் மந்தமாகவும் வறண்டும் காணப்படும்.
இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும். பகல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கும் இரவு ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.
இதற்கு முன்பு வெற்றி பெற்ற அணிகள்
2007-இந்தியா
2009-பாகிஸ்தான்
2010-இங்கிலாந்து
2012-மேற்கு இந்திய தீவுகள்
2014-இலங்கை
2016-மேற்கு இந்திய தீவுகள்
ஆட்ட நாயகன்
2007-ஷாஹித் அஃப்ரிதி
2009- திலக்ரத்னே தில்ஷான்
2010-கெவின் பீட்டர்சன்
2012- ஷேன் வாட்சன்
2014-விராட் கோஹ்லி
2016-விராட் கோஹ்லி

விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக கனமழை BJP Tamil Nadu தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran எடப்பாடி பழனிசாமி MK Stalin AIADMK ADMK திருமாவளவன் மு.க.ஸ்டாலின் AMMK அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss தமிழ்நாடு டிடிவி தினகரன் சீமான் Thirumavalavan முக ஸ்டாலின் செங்கோட்டையன் Seeman Sengottaiyan PMK வடகிழக்கு பருவமழை பாமக சட்டசபை தேர்தல் Edappadi Palaniswami Tamilaga Vettri Kazhagam வானிலை ஆய்வு மையம் Congress