டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த மாதம் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திகார் சிறையில் உள்ள அவர் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரது நீதிமன்ற காவலை நீட்டிக்கவேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.அந்த கோரிக்கையை ஏற்ற டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கெஜ்ரிவாலுக்கு வரும் மே 7ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
அதேபோல இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவருக்கும் மே 7ம் தேதி வரை நீதிமன்ற காவலை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S