18 வயது நிரம்பிய மனைவியுடன் கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சட்டம் கூறுகிறது. மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு வைத்திருந்தாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது எனவே குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுவிப்பதாக சத்தீஸ்கர் நீதிமன்றம் தெரிவித்தது.
மனைவியின் விருப்பமின்றி, கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதாகவும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இயற்கைக்கு முரணான வகையில் தன்னிடம் உறவில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு முரணான உடலுறவு, பெண்களுக்கு எதிரான கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் கணவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.கே.சந்திரவன்சி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ’18 வயது நிரம்பிய மனைவியுடன் கணவர் உடலுறவு வைத்துக்கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சட்டம் கூறுகிறது. இந்த வழக்கில் சட்டப்பூர்வமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. எனவே கணவர் தனது மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்திருந்தாலும் அது பாலியல் பலாத்காரம் ஆகாது’ என்று நீதிபதி தெரிவித்தார்.