Tamil News & polling
கடலூர்,
மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பக்கம் வலது புறம் இருந்த டயர் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தறிக்கெட்டு தாறுமாறாக ஓடியது.
இதில் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது ஏறிய பஸ் மறுமார்க்கத்தில் சென்னை-திருச்சி சாலையில் பாய்ந்தது. அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற 2 கார்கள் மீது மோதி சாலையோர பள்ளத்திற்குள் பஸ் பாய்ந்து நின்றது. இதனால், பஸ்சில் பயணித்த பயணிகள் கூச்சலிட்டனர். அவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
பஸ் மோதிய வேகத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கி கிடந்தன. அதில் சிக்கி இருந்தவர்கள் மரண ஓலம் எழுப்பினர். இதை பார்த்தவர்கள் ஓடோடி வந்துமீட்பு முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கார்களுக்குள் சிக்கியவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அங்கு வந்து, மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேர், சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒரு குழந்தையும், முதியவரும் உயிரிழந்தனர். இதன் மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மற்ற 4 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அதில் ஒரு காரில் வந்தவர்கள் கரூர் சின்ன ஆண்டான் கோயில் சுப்பையா பிள்ளை லே-அவுட் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராஜரத்தினம்(வயது 67), அவரது மனைவி ராஜேஸ்வரி(57), கார் டிரைவரான ஜெயக்குமார்(30) என்பதும் மற்றொரு காரில் வந்த திருச்சி திருவரம்பூர் காட்டூரை சேர்ந்த ஒரே குடும்பமான முகமது பாரூக்(45), அவரது மனைவி ரிபானா(33), அவரது மகள் தாஜ்பிர்கா(10), மகன் அப்துல் பாத்தா(7), புதுக்கோட்டை பிள்ளை தண்ணீர் பந்தல் கலீப் நகர் சிராஜூதின் மனைவி குர்ஜீஸ் பாத்திமா(32), இவரது மகன் அஜீஸ் அகமது(3) என்பது தெரியவந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த பிள்ளை தண்ணீர் பந்தலை சேர்ந்த முகமது காசிம், அவரது மனைவி அமிஷா(52), சிராஜூதின் மகன்கள் அக்துல்அஜிஸ்(8), அப்துல் அஹர்(6) ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் காயமடைந்த முகமது காசிம் மகன் சிராஜூதின் என்பவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து கனடா சென்றார்.
அவரை வழி அனுப்புவதற்காக முகமது பாரூக் மற்றும் முகமது காசிம் குடும்பத்தினர் காரில் சென்னைக்கு சென்றுள்ளனர். விமான நிலையத்தில் சிராஜூதினை வழியனுப்பி வைத்த அவர்கள் மீண்டும் அங்கிருந்து காரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்தில் சிக்கியது தெரியவந்தது.
இந்த நிலையில், கார்கள் மீது அரசு பஸ் மோதி 9 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அரசு பஸ் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை ஒத்தக்கடைப் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தாஹா அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விஜய் Vijay DMK Chennai சென்னை திமுக TVK அண்ணாமலை தவெக Annamalai அதிமுக பாஜக கனமழை BJP TTV Dhinakaran தமிழக வெற்றிக் கழகம் Tamil Nadu எடப்பாடி பழனிசாமி ADMK MK Stalin திருமாவளவன் AIADMK அன்புமணி ராமதாஸ் AMMK மு.க.ஸ்டாலின் Anbumani Ramadoss டிடிவி தினகரன் சீமான் தமிழ்நாடு PMK செங்கோட்டையன் Thirumavalavan Seeman Sengottaiyan முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் Congress Edappadi Palaniswami வடகிழக்கு பருவமழை பாமக Tamilaga Vettri Kazhagam காங்கிரஸ் Nellai நெல்லை தமிழகம் வானிலை ஆய்வு மையம்