POLLING FLAMES 📊 TN ELECTION 2026
வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.
🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.
சென்னை:
தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையை தாண்டி கடந்த 3 நாட்களாகவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று உள்ளது. இன்று காலையிலும் பல இடங்களில் சர்வசாதாரணமாக பணப்பட்டுவாடா நடைபெற்றதை காண முடிந்தது.
அந்த வகையில் சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டு கட்டுகளையும், வாக்காளர்களுக்கும், கூட்டணி கட்சியினர்களுக்கும் பணம் வினியோகம் செய்ததற்கான ஆவணங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மந்தவெளிப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலையில் தேர்தல் பறக்கும் படையினர், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்தபோது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான ரூபாய் நோட்டுகள் இருந்ததை தேர்தல் பறக்கும் படையினர் கண்டறிந்தனர். இதில் முதற்கட்டமாக கூட்டணி கட்சிகளுக்கு பணம் விநியோகித்ததற்கான ஆதாரங்களையும், மந்தவெளி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் கைப்பற்றினர்.
வீட்டின் வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதில் வீட்டின் சமையல் அறையில் இருந்து கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வீட்டின் படுக்கை அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அதோடு மந்தவெளி பகுதி நிர்வாகிகளுக்கு பணம் கொடுப்பதற்கான உரைகள், பணம் எண்ணும் எந்திரம் ஆகியவற்றையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டத்தில் பறக்கும்படை நடத்திய சோதனையில் ரூ.73 லட்சத்து 44 ஆயிரத்து 510 சிக்கியுள்ளது. நெல்லை தொகுதியில் அதிகபட்சமாக சுமார் ரூ.25 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
போலீசாரின் சோதனையில் ரூ.48 ஆயிரத்து 500-ம், வருமான வரித்துறையினர் மூலமாக நெல்லை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரமும் மாவட்டம் முழுவதும் ரூ.10 லட்சத்து 68 ஆயிரத்து 812 மதிப்பிலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
நேற்று இரவு வரை நெல்லை மாவட்டத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்து 77 ஆயிரத்து 337 பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லத்துரை அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் அங்கு பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சாக்குமூட்டையில் கட்டுக் கட்டாக இருந்த ரூ.44½ லட்சம் பறிமுதல் செய்யப் பட்டிருந்தது.
இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கப்பட்டிருந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் சுந்தர்ராஜ் வீட்டில் ஏராளமான பணம் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று அவரது வீட்டில் பறக்கும்படையினர் 7 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து ரூ.27 லட்சத்து 65 ஆயிரம் மற்றும் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டப் பகுதியில் பைகளில் இருந்த சுமார் ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கடந்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி முதல் நேற்று வரை நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.1கோடியே 17 லட்சத்து 71 ஆயிரத்து 560 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் ரூ.20,33,920, நாகர்கோவில் தொகுதியில் ரூ.18,99,340,குளச்சல் தொகுதியில் ரூ.22,32,250, பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.6,42,700, விளவங்கோடு தொகுதியில் ரூ.32,33,560, கிள்ளியூர் தொகுதியில் ரூ.17,29,790 பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று வரை ரூ.1 கோடியே 57 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ரூ.52 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ரொக்க பணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கி ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை திரும்ப பெற்றுச் சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் நேற்று வரை ரூ.1 கோடியே 6 லட்சத்து 1,671 பணமும், 3,240 துண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி மணப்பாக்கத்தில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய அவர்கள் கொண்டு சென்ற ரூ.5.34 லட்சம் ரொக்கம் மற்றும் டோக்கன்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8 தொகுதிகளையும் சேர்த்து ரூ.2 கோடியே 99 ஆயிரத்து 870 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
880 லிட்டர் அளவு மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 5 லட்சமாகும். விலை உயர்ந்த மற்றும் சாதாரணமான போதை பொருட்கள் 308 கிலோ பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ.6 கோடியே 8 லட்சத்து 89 ஆயிரத்து 425 ரூபாய் ஆகும்.
ஒசூர் அருகே வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அட்டகுறிக்கி என்ற கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பசவராஜ் வீட்டில் 6 மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ.58 லட்சம் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அந்த பணத்திற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாத நிலையில் வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரத்து 127 அளவிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தங்க நகைகள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 57லட்சத்து 30 ஆயிரத்து 201 பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் ஆவணங்கள் சமர்ப்பித்ததன் அடிப்படையில், ரூ.1 கோடியே 55 லட்சத்து 63ஆயிரத்து 661 உரியவர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை மூலம் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட விதிமுறைகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள மதுபான பாட்டில்களும், ரூ.78 ஆயிரத்து 522 மதிப்பிலான போதைப்பொருட்களும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.36.17 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிமீறல் தொடர்பாக இதுவரை கோவை மாநகர போலீசாரால் 112 வழக்குகள், மாவட்ட போலீசாரால் 356 வழக்குகள், பறக்கும் படைகளால் 69 வழக்குகள் என மொத்தம் 537 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 712 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.15 லட்சம் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் பறக்கும்படையினர் இன்று ரூ.2.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 3 இடங்களில் ரூ.6 லட்சத்து 34 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
Ajith Kumar | "உங்கள் ஆதரவின்றி இது அமையவில்லை..." ரசிகர்களுக்கு...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: