சென்னை,
சென்னை நங்கநல்லூரில் இஸ்டாகிராமில் பிரபலமான நாகலட்சுமி என்ற பெண் (42 ) தனது கனவன் சுப்பிரமணியுடன் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு பரத்வாஜ், சைலாஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சுப்பிரமணியனுக்கு சரியான வேலை எதுவும் இல்லை. நாகலட்சுமிக்கு ஆடைகள் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு பிடித்த உடையான சேலை விற்பனையில் ஈடுபட தொடங்கினார். இதற்காக நங்கநல்லூர் மற்றும் அண்ணாநகரில் சேலை விற்பனை கடைகளை நடத்தி வந்தார். நாகலட்சுமியின் இந்த தொழில் ஆர்வம் அவரை ஆன்லைன் மூலமாக சேலை வியாபாரத்திலும் தள்ளியது.
இதனால் நங்கநல்லூர் ஸ்ரீசாய் சில்க்ஸ் ரெடிமேட் சேலைகள் மொத்த மற்றும் சில்லரை விற்பனை என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி அதன் மூலமாக தினமும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.
இன்றைய இளம் தலைமுறை பெண்கள் பலர் சேலை உடுத்துவதை மறந்து போய் இருக்கும் நிலையிலும் சந்தைகளில் ரெடிமேட் சேலைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி தனது கடைகளில் ரெடிமேட் சேலைகளை அதிகளவில் நாகலட்சுமி விற்பனை செய்து வந்து உள்ளார்.
இது தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3 லட்சம் பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
வீடியோக்களை பார்த்து நங்கநல்லூர் மற்றும் அண்ணாநகர் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான சேலைகளை தேர்வு செய்தனர். இதன் மூலம் சேலை விற்பனையில் நாகலட்சுமிக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ளது. இதை வைத்து 2 மகன்களையும் அவர் நன்றாக படிக்க வைத்துள்ளார். மூத்த மகன் பரத்வாஜ் ரஷியாவில் டாக்டருக்கு படித்து வரும் நிலையில் இளைய மகன் சைலாஷ் சென்னையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் தொடர்பான படிப்பை படித்து வருகிறார்.
அதே நேரத்தில் நாகலட்சுமி இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை வெளியிடுவதில் அவரது கணவர் சுப்பிரமணியனுக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் கணவருக்கு நாகலட்சுமி ஓட்டல் வைத்து கொடுத்துள்ளார். ஆனால் அதனை சரியாக நடத்தாததால் லட்சக்கணக்கில் நஷ்டம் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக மனைவியுடன் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நங்கநல்லூரில் இருந்து சுப்பிரமணியன் மதுரைக்கு சென்று விட்டார். அங்கு தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்த அவர் அவ்வப்போது மனைவியுடன் பேசியும் வந்துள்ளார். சுப்பிரமணியன் கேட்கும் போதெல்லாம் வங்கி கணக்கில் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார் நாகலட்சுமி. இருப்பினும் சுப்பிரமணியன் சென்னைக்கு வந்து ஒன்று அல்லது 2 நாட்கள் நாகலட்சுமியுடன் தங்கும்போது தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் சுப்பிரமணியன் நாகலட்சுமியை பார்ப்பதற்காக நங்கநல்லூர் வந்துள்ளார். அப்போது மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் மதுரைக்கே சென்று விடுங்கள் என்று மனைவி கூறியுள்ளார்.
ஆனால் இந்தமுறை மதுரைக்கு செல்ல விரும்பவில்லை. வீட்டை விட்டு வெளியில் சென்ற சுப்பிரமணியன் அரிவாள் ஒன்றை வாங்கிக் கொண்டு மீண்டும் விட்டுக்கு வந்து, தன் மனைவியை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், வேலை எதுவும் இல்லாமல் சுற்றிய சுப்பிரமணியன் தன்னை விட மனைவி அதிகமாக பணம் சம்பாதிக்கிறாள் என்கிற தாழ்வு மனபான்மையுடன் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.
ரஷியாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் முத்த மகன் பரத்வாஜ் சென்னை வருகிறார். குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
தளபதிதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில்...அடுத்த செய்தி (Next) »
அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள்...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: