ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அப்போட்டி வெஸ்ட் இண்டீஸில் உள்ள கயானா நகரில் ஜூன் 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு நடைபெற உள்ளது. அதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் பிலிப்ஸ் சால்ட், லிவிங்ஸ்டன், மொயின் அலி, ரசித் போன்ற தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர்.
அதனாலேயே 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் இந்தியாவை அசால்டாக 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதே போல ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், பாண்டியா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். அந்த வகையில் இவ்விரு அணிகளுமே சமமான திறமையை கொண்டுள்ளதால் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 2022 டி20 உலகக் கோப்பையில் தங்களிடம் வாங்கிய அடியால் தற்போது இந்தியா பன்மடங்கு முன்னேற்றம்டைந்துள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது இந்தியா மிகுந்த ஆக்ரோசத்துடன் அதிரடியாக விளையாடி வருவதாகவும் பட்லர் பாராட்டியுள்ளார்.
ஆனால் 2022லயே அதிரடியாக விளையாடிய நாங்கள் இப்போதும் அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று பட்லர் எச்சரித்துள்ளார். இது பற்றி ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கே நாங்கள் முற்றிலும் வித்தியாசமான இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளோம். ரோகித் சர்மா இந்திய அணியை வழி நடத்தும் விதமும் பேட்டிங் செய்யும் விதமும் அற்புதமாக இருக்கிறது”
“அதனால் இந்தியா தற்போது நிறைய சுதந்திரத்துடன் மிகுந்த ஆக்ரோசத்துடன் விளையாட முயற்சிக்கின்றனர். இந்த மாற்றம் 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக 2023 உலகக் கோப்பையில் அவர்கள் அதிரடியாக விளையாடினர். தற்போது அவர்கள் விளையாடும் ஸ்டைலில் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றனர். நாங்களும் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்”
“அவர்கள் மிகுந்த ஆக்ரோசத்துடன் வருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்களும் அப்படியே இருப்போம். 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது மகத்தான நினைவை கொடுத்தது. அது இங்கிலாந்துக்காக நான் விளையாடிய ஒரு சிறந்த போட்டி. அப்போட்டியில் சூரியகுமார் விக்கெட்டை எடுத்தது மறக்க முடியாதது. அப்போட்டியில் நாங்கள் அதிரடியான துவக்கத்தை பெற்றது வெற்றிக்கு காரணமானது” என்று கூறினார்.